சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை வெள்ளச்சேதம் குறித்து பிரதமரிடம் விளக்கியதாகவும், சீரமைக்க ரூ.1500 கோடி நிதி உதவி கேட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற தினத்தந்தி நாளிதழ் பவள விழாவில் பங்கேற்றுவிட்டு தில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி. அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்பட முக்கிய பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர்.
பின்னர் முதல்வர், துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
வடகிழக்கு பருவ மழை வெள்ள சேதங்கள் குறித்து 30 நிமிடங்கள் கவனமாக கேட்டறிந்தார். அப்போது மழை வெள்ள சேதத்தை சரிசெய்வதற்கு ரூ.1500 கோடி நிதி உதவி அளிக்குமாறு கேட்டுள்ளோம்.
கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வடிகால் அமைக்க உரிய நிவாரணம் நிதி அளிப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உதவுவதாக கூறிய பிரதமருக்கு நன்றி கூறினார் பழனிசாமி.
மேலும் அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சல் என்பது வேறு, மழை வெள்ள சேதம் வேறு என்று கூறிய முதல்வர், வெள்ள நீர் படிப்படியாக குறைந்து வருவதாகவும், வயல்களிலும், ஏரிகளிலும் வீடு கட்டியதால்தான் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதாக கூறினார்.
தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரினை படிப்படியாகத்தான் அகற்ற முடியும். தற்போது, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
உள்ளாட்சி தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கில் தீர்ப்பு வந்த பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் கூட்டணி குறித்து சட்டப்பேரவைத் தேர்தல் வரும்போதுதான் முடிவெடுக்க முடியும் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.