சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் இன்று திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள தினத்தந்தி நாளிதழ் பவள விழாவில் பங்கேற்க தில்லியில் இருந்து தனி விமான மூலம் இன்று காலை 9.55 மணியளவில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விமான நிலைய வாசலில் ஏராளமான பாஜக தொண்டர்கள் திரண்டு நின்று மோடியை வரவேற்றனர்.
சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறு விமானப் படையின் தளத்துக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்கு அவரை அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அந்த இடத்திலிருந்து அவர் கார் மூலம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்துக்கு வருகை தந்துள்ளார்.
பின்னர், ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி. சோமநாதன் மகள் திருமண விழாவில் மோடி பங்கேற்கிறார். மதியம் 12.30 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியையும் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.