7 நாள் விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக 7 நாள் விடுமுறைக்கு பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும்
7 நாள் விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக 7 நாள் விடுமுறைக்கு பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கி படிப்படியாக தீவிரம் அடைந்தது. நாளுக்கு நாள் மழை வலுவடைந்து வந்ததால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டன. 

இதையடுத்து கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி ஒரு மணி நேரம் முன்பாகவே மாணவர்களை பள்ளியில் இருந்து முன்னதாக வீட்டுக்கு அனுப்ப ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.  இருப்பினும், தொடர்ந்து கனமழை பெய்து கொண்டே இருந்ததால், நவம்பர் 3-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த விடுமுறை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடந்த வாரம் செவ்வாய்கிழமை முதல் நேற்று திங்கள்கிழமை வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த பருவமழையானது படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது. 

ஆனாலும் காலை முதலே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. இதற்கிடையே, இரவு பெய்யும் மழையை பொறுத்தே பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முடிவு செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செழியன் அறிவித்திருந்தார்.

படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து இன்று முதல் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.

இந்நிலையில், சென்னையில் புரசைவாக்கம், தி.நகர், ராயபுரம், வேப்பேரி, வேளச்சேரி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் 9 பள்ளிகள் மட்டும் இயங்காது. இவை தவிர சென்னை மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செழியன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பள்ளிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னை புறநகர்களான குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலையிலிருந்து விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இருப்பினும் இங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com