மணிலா: ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களும் இன்று சந்தித்துக் கொண்டனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஆசியான் அமைப்பின் 12வது கிழக்கு இரண்டு நாள் உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நாளை திங்கள்கிழமை (நவ.13) தொடங்குகிறது. இதில், ஆசியான் அமைப்பு நாடுகளுடன் நட்புறவு கொண்டுள்ள இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டின் 15வது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தில்லயில் இருந்து 3 நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்குக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கைகுலுக்கி வரவேற்றனர். டிரம்பும், மோடியும் பரஸ்பரம் வரவேற்புத் தெரிவித்துக் கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த மாநாட்டில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூயி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன பிரதமர் லீ கெ கியாங், ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், வியட்நாம் பிரதமர் கியூயன் ஷூயாங் புக், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்ரேட் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் அதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து நாட்டுத் தலைவர்களும் ஒரே மாதிரியான உடையணிந்திருந்தனர். பின், பிலிப்பைன்ஸ் அதிபர் டுடெர்டேவும், அவரது மனைவியும், அனைத்து நாட்டுத் தலைவர்களையும் வரவேற்று குடும்பப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை வலுப்படுத்துவது தொடர்பாக ஆசியான் மாநாட்டில் விவாதிக்கப்படுவதுடன், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளைத் தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.
நாளை திங்கள்கிழமை நடைபெறும் ஆசியான் வர்த்தக மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டிலும், நவம்பர் 14-ஆம் தேதி மணிலாவில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவுக் கூட்டத்திலும், ஆசியானின் 50வது ஆண்டு நிறைவு விழாவின் விசேஷ கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
மாநாடு நிகழ்ச்சிகளுக்கு பின்னர் பிலிப்பைன்ஸ் இந்திய தூதர் மற்றும் இந்திய உறுப்பினர்களையும் சந்தித்து பேசும் மோடி, சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மகாவீர் பிலிப்பைன்ஸ் அறக்கட்டளைக்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி இடையேயான இருதரப்பு சந்திப்பு நாளை பிற்பகல் 1 மணியளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.