கின்ஷாசா: காங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரெயில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள கச்சா கனிம வளங்கள் கொண்ட ஒரு நாடு காங்கோ. இது ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும்.
காங்கோவின் லுபும்லாஷி நகரில் இருந்து லுயினா நகருக்கு நேற்று ஒரு சரக்கு ரயில் 13 பெட்டிகளில் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. இந்த சரக்கு ரயிலில் பொதுமக்களும் சட்டவிரோதமாக பயணித்துள்ளனர். அந்த ரயில் லுபுடி என்னுமிடத்தில் சரிவில் ஏறியபோது எதிர்பாராத விதமாக தடம்புரண்டது.
தடம்புரண்ட அந்த ரயில் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து, தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அந்த ரயிலில் பயணம் செய்த 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அங்கு செயல்பட்டுவரும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்குள்ளான ரயில் சரக்கு ரயில். அது பயணிகளை சுமந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. அதில் பயணித்த அனைவரும் சட்டவிரோத பயணம் செய்ததாகவே கருதப்படுவர் எனவும் அவர்கள் சட்டவிரேதமாக பயணம் செய்யாமல் இருந்திருந்தால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது என தேசிய ரயில் நிறுவனத்தின் மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காங்கே பல ஆபத்தான ரயில்கள் விபத்துகளை சந்தித்துள்ளது. கடந்த 2014-இல் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்ட விபத்தில் 74 பேர் உயிரிழந்ததோடு 163 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 200 சடலங்கள் புதைக்கப்பட்டதாக ரெட் கிராஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தேசிய செய்தி நிறுவனம் ஒரு மாதம் கழித்து 136 பேரின் உயிரிழப்புகள் குறித்து பேசியது.
1987-ஜூலையில் ஜாம்பியா எல்லையில் நிகழந்த ரயில் விபத்தில் 150 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.