நீலகிரி: கொடநாடு கர்சன் எஸ்டேட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6வது நாளாக தொடர்ந்து சோதனை நடந்தி வருகின்றனர்.
அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் கடந்த 5 நாள்களாக வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.1,430 கோடி மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணம், சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன என்று வருமான வரித் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போலி நிறுவனங்களை நடத்தியது, அந்த நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது, வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 9-ஆம் தேதி சோதனையைத் தொடங்கினர். சென்னையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டது.
5 நாள்கள் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற இச்சோதனையில், ரூ.1,430 கோடி மதிப்புள்ள நகைகள், ரொக்கப் பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத வருமான வரித் துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுடன் சேர்ந்து அமலாக்கத் துறையினரும் விசாரணையில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அவர் கூறினார்.
இந்நிலையில், 5 நாள்களாக நடைபெற்ற சோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், கொடநாடு கர்சன் எஸ்டேட்டில் 6வது நாளாக இன்றும் செவ்வாய்கிழமை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் வருமான வரித் துறையினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளனர். இதனால் திவாகரனும் விசாரணைக்கு ஓரிரு நாள்களில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இச்சோதனையில் தொடர்புடைய பலருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறையினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.