புதுச்சேரி: மீனவ பெண்களுக்கு மானியித்துடன் கூடிய மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர ஸ்கூட்டர் அளிக்கப்படவுள்ளது. இதற்கு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீன் வியாபாரம் செய்யும் பெண்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய மீனவர் பேரவை தலைவர் மா.இளங்கோ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தலைச்சுமையாகவும், ரோடு ஓரங்களில் அமர்ந்தும் மீன் வியாபாரம் செய்யும் மீனவ பெண்களுக்கு பயன்படும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர ஸ்கூட்டர் வாகனத்தை மத்திய, மாநில அரசுகளின் மான்யத்துடன் வங்கிக்கடன் மூலம் வழங்க தேசிய மீனவர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
மும்பை ஐ.ஐ.டி தொழில்நுட்பத்துடன் இயங்கும் மூன்று சக்கர வாகனத்தை மும்பை ஐ.ஐ.டி பேராசிரியர் வடிவமைத்துள்ளார். ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு இதற்கான மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. காதி கிராம தொழில் வளர்ச்சி கழகமும் ஏழை, எளிய சுய தொழில் முனையும் மீனவ பெண்களுக்கு உதவ முன் வந்துள்ளது.
மிக குறைந்த மின்சார செலவில் இயங்கும் இந்த வாகனத்தை மத்திய அரசு மீன்வளத்துறை மற்றும் அனைத்து மாநில மீன்வளத்துறைகள் மூலம் மிக குறைந்த விலைக்கு வழங்கிட தேசிய மீனவர் பேரவை முயன்று வருகின்றது.
முதல் கட்டமாக வருகிற 24 ந் தேதி புதுச்சேரியில் நடைபெறும் தேசிய மீனவர் பேரவையின் அகில இந்திய மீனவர் பிரதிநிதிகள் மாநாடு நிறைவு விழா பொது நிகழ்ச்சியின் போது மீனவ பெண்கள் 20 பேருக்கு இந்த வாகனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மீனவப்பெண்களுக்கு இந்த மூன்று சக்கர ஸ்கூட்டர் 65% மான்யமாகவும், 30 சதவீதம் வங்கி கடனாகவும் வழங்கப்படவுள்ளது. பயனாளிகள் 5 சதவீதம் பங்களிக்க வேண்டும்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் தலைவர், தேசிய மீனவர் பேரவை 168, சுப்பையா சாலை,(ரயில்வே ஸ்டேசன் ரோடு) புதுச்சேரி – 1. என்ற விலாசத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ மின் அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு milango1955@gmail.com மின்னஞ்சல் முகவிரியிலும், 9345455122 என்ற செல்லிடப்பேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.