சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் இந்த ஆண்டிற்கான பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா) கீழ் நவம்பர் 30ந்தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ் நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கள விளம்பரத்துறை தனது கள விளம்பர அலுவலர்களுக்கென ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் பயிலரங்கை தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையரும் முதன்மைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மிகவும் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது
பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த ஆண்டு சேர்ந்த விவசாயிகள் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை விட இருமடங்கு அதிகரித்து 15- லட்சம் ஆக இருந்தது. பயிர்களின் சேத மதிப்பீடு கிராம அளவில் மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் காப்பீடு பெறுவது எளிதாகிறது என்று கூறினார்.
மேலும் தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை வரலாறு காணாத அளவு பொய்த்ததால் இந்த பயிர்க் காப்பீடு மூலம் விவசாயிகள் பெரிதும் பலனடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் நெல்பயிர் நடவு செய்துள்ள விவசாயிகள் இந்த ஆண்டு நவம்பர் 30ந்தேதிக்குள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் காலக்கெடுவிற்குப்பின் பணம் செலுத்துபவர்களுக்கு காப்பீடு கிடைக்காது என்றும் அவர் கூறினார்.