தூத்துக்குடி: முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை ஜெயலலிதா ஆத்மா மன்னிக்காது என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரகள் நடத்திய அதிரடி சோதனை குறித்து டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க. தமிழ்செல்வன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் முழுவதும் வருமானவரித் துறையினரின் நேற்று இரவு முழுவதும் நடத்திய அதிரடி சோதனையை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
முதல்வர் பழனிசாமியும் மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் ஜெயலலிதா ஆத்மா ஒருபோதும் மன்னிக்காது என்றார்.
மேலும் பதவியை காத்துக்கொள்ளும் குறுகிய நோக்குடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுபோன்ற சோதனையை நடத்தி வருகிறது என்றார்.
சசிகலா, தினகரனுக்கு அதிமுக தொண்டர்களிடையே செல்வாக்கு பெருகியுள்ளதாகவும் தமிழ்செல்வன் பேட்டியின் போது தெரிவித்தார்.