கோவையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அதிகாரிகளை அழைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்தினார்.
இது மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆய்வு குறித்து ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆளுநரின் முதன்மை செயலாளர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: - ஆளுநர் இதுபோன்று ஆலோசனை நடத்துவதற்கு எந்த சட்டமும் தடையாக இல்லை. இதுபோன்ற செயல்கள் மூலம் வருங்காலத்தில் தமிழ்நாடு மிளிரும்.
மத்திய அரசின் தூண்டுதலால் அரசியலில் ஈடுபடுகிறேன் என குற்றம்சாட்டுவது துரதிர்ஷ்டவசமானது. ஆளுநர் அரசியலில் ஈடுபடுகிறார் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நேரடி ஆய்வை பலர் பாராட்டியுள்ளனர், இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசாமில் ஆளுநராக இருந்தபோதும் இதேபோல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளேன். இதை அங்குள்ள மக்கள் பாராட்டியிருக்கிறார்கள். தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வுகளை தமிழக அரசும் அமைச்சர்களும் பாராட்டியுள்ளனர். தமிழகத்தில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.