சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குகளுக்கு பணப்பட்டுவாடா குறித்த புகார் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக வந்த புகாரை தொடர்ந்து தேர்தலை ஆணையம் ரத்து செய்து விட்டது.
இதைத் தொடர்ந்து போலி வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாகவும், பணப்பட்டுவாடா தொடர்பாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனிடையே டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தெரிவித்தார்.
இதனால் நிலுவையில் உள்ள திமுகவின் வழக்குகளை தாக்கல் முடித்துவைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அந்த வழக்குகளை இன்று விசாரிப்பதாக கூறியிருந்தார்.
அதன்படி இன்று ஆர்.கே,நகர் தேர்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஓராண்டாக ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளநிலையில், தேர்தலை நடத்தாமல் தாமதிப்பதற்கான காரணம் என்ன? என்றும் இன்னும் எத்தனை நாள்களுக்கு தேர்தலை நடத்தாமல் தாமதிப்பீர்கள்? என்றும் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து நீதிபதி அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில் டிச.31-ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டதுடன் அதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் டிசம்பர் முதல் வாரத்துக்குள் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். பணிகளைத் தொடங்கலாம் என்றும் போலி வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உடனடியாக இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, திமுக தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துது.
மேலும் பணப்பட்டுவாட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்றும் வருமான வரித்துறையால் புகார் அளித்தோர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றம்சாட்டுக்கு, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்த புகார் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பியது.
இதுதொடர்பாக ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய, மாநில அரசு, தேர்தல் ஆணையமும் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், வருமான வரித்துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆர் நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த பின்னரே தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக வேட்பாளர் மருது கணேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.