சசிகலாவின் பரோல் மனு நிராகரிப்பு: புகழேந்தி மறுப்பு
சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. இந்நிலையில் சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து சசிகலாவுக்கு பரோல் வழங்கினால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடியுமா என கேட்டு கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மெஜ்ரிக், சென்னை காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பரோல் பெறுவதற்கு சமர்ப்பித்த ஆவணங்கள் முறையாக இல்லாததால் மனுதள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கூடுதல் தகவல்களுடன் புதிய மனு தாக்கல் செய்ய கர்நாடக சிறைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் சசிகலா பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.