பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை 5 சதவீதம் குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலின் விலையை மாதத்துக்கு இரு முறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.
அதன் பின் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் முறை அமலுக்கு வந்தது. இந்தப் புதிய நடைமுறை காரணமாக கடந்த மூன்று மாதங்களில் இந்த எரிபொருள்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. எனவே, பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர் இதையடுத்து. பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை மத்தய அரசு நேற்று அறிவித்தது.
இந்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை 5 சதவீதம் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்தால் பொதுமக்கள் மேலும் பயன்பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.