மெர்சல் திரைப்படம் வெளியாக உதவியதற்காக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
"மெர்சல்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய கிரீன்வேஸ் இல்லத்தில் நடிகர் விஜய் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து மெர்சல் திரைப்படம், விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களுக்கு சென்னையில் திங்கள்கிழமை (அக்.16) திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது விலங்குகள் நல வாரியம் எழுப்பிய சந்தேக கேள்விகள் அனைத்துக்கும் படக்குழுவினர் பதிலளித்தனர்.
பின்னர் மெர்சல் படத்துக்கு எவ்விதத் தடையுமில்லை என்று விலங்குகள் நல வாரியம் அறிவித்தது. இதையடுத்து மெர்சல் திரைப்படம் வெளியாக உதவியதற்காக முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து நடிகர் விஜய் இன்று நன்றி தெரிவித்தார். இந்த தகவலை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.