சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நற்பணி மன்றத்தினர் நிலவேம்பு கசாயம் விநியோகிக்க வேண்டாம் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தவும் குணமாக்கவும் தமிழக அரசே பல்வேறு இடங்களில் நிலவேம்பு குடிநீரை அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு சமூக அமைப்புகள், நடிகர்களின் அரசியல் கட்சிகள் ஆகியோர்களும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் அளித்து வருகின்றனர்.
இதனிடையே இதனிடையே நிலவேம்பு குடிநீரை காய்ச்சல் இல்லாதவர்கள் குடித்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று ஒருசிலர் சமூக இணையதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்.
ஆனால் நிலவேம்பு குடிநீர் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க வேண்டும் என ரசிகர்களுக்கு கமலஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும் டெங்கு ஒழிப்பதற்கான மற்ற பணிகள் தொடரட்டும் என நற்பணி மன்றத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான் என்று கூறியுள்ளார்.