திபெத்திய தலைவர் தலாய் லாமாவை எந்த தலைவர் சந்தித்தாலும் அது எங்களை பொறுத்தவரை மிகப்பெரிய குற்றம் என சீனா கூறியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு துணை அமைச்சர் ஜாங் ஜிஜோங் கூறியதாவது
“எந்த நாட்டின் தலைவர்களும் தலாய்லாமாவை சந்திப்பது என்பது எங்களின் பார்வையில், சீன மக்களின் உணர்வுகளுக்கு செய்யும் குற்றம் ஆகும். தலாய்லாமாவை ஒரு மத தலைவர் என எந்த நாடு வாதிட்டாலும் அதனை சீனா ஏற்காது. தலாய் லாமா வரலாற்றால் புறக்கணிக்கப்பட்டவர். மதத்தை மேல் அங்கியாக அணிந்த அரசியல் பிரமுகர். 1959-ல் வேறொரு நாட்டிற்கு தப்பி சென்ற தலாய்லாமா, தாய்நாட்டிற்கு துரோகம் செய்தவர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலாய் லாமாவை உலக தலைவர்கள் சந்திப்பதற்கு தொடர்ந்து சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, தீபெத்தை சீனாவின் ஒரு அங்கமாக அங்கீகரிக்க வேண்டும் என்று உலக நாடுகளிடம் தொடர்ந்து சீனா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.