மதுரை: புளூவேல் இணைய வழி விபரீத விளையாட்டால் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி அருகே உள்ள மொட்டமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் (19) புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார். அவர் புளூவேல் விளையாட்டில் மனரீதியாக நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இச்சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய விபரீத விளையாட்டினால் மேலும் அசம்பாவிதங்கள் நடந்துவிடக் கூடாது என அரசுத் தரப்பிலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு வேறொரு வழக்கு விசாரணைக்காக தயாரானபோது வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி புளூவேல் மரணம் குறித்து தான் வழக்கு தொடர விரும்புவதாக சுட்டிக்காட்டினார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், "நீங்கள் தனியாக வழக்கு தொடரத் தேவையில்லை. இது குறித்து நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. திங்கள் கிழமை (செப் 4) வழக்கு விசாரணை நடைபெறும்" என்று தெரிவித்தனர்.