முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வருகை
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று மாலை சேலம் வருகிறார்.
இதுதொடர்பாக மாநகர மாவட்டச் செயலாளரும், மேற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான ஜி.வெங்கடாஜலம் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
நாமக்கல் மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொள்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதல்வர் , அங்கிருந்து கார் மூலம் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் வந்து தங்குகிறார்.
பின்னர், ஞாயிற்றுக்கிழமை ஜவஹர் திடலில் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மாலையில் நாமக்கல்லில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு சேலத்தில் தங்கும் அவர், திங்கள்கிழமை காலை சீலநாயக்கன்பட்டியில் நடைபெறும் அதிமுக ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து, மாலையில் ஓமலூர் பகுதியில் நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார் என்றார்.