பாக்தாத்: ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள ஹிட் நகரத்தில் அரசியல் கட்சியின் தலைமை அலுவலகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக்கின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அல்-அன்பர் மாகணத்தில் முக்கிய கட்சிகளில் ஒன்றான அல்-ஹால் என்ற கட்சி செல்வாக்குடன் இருந்து வருகிறது. வரும் மே மாதம் இப்பகுதியில் உள்ள நகராட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஹிட் நகரில் இருக்கும் அல்-ஹால் கட்சியின் தலைமை அலுவலத்தில் நேற்று மாலை மேலிட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, ராணுவ வீரர்களின் சிருடை அணிந்தபடி கூட்டம் நடைபெற்ற அலுவலகத்துக்குள் நுழைந்த இரு தற்கொலை படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், பாதுகாப்பு படையை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
அல்-ஹால் கட்சி சார்பில் தேர்தலில் போடியிடும் வேட்பாளர் ஜைனப் அப்டெல் ஹமித் அல் ஹிட்டி உள்பட 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் ஒருவரான நகராட்சி பணியாளர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த பயங்கவாத அமைப்புகளும் பொறுப்பேற்றுக் கொள்ளப்படவில்லை.