மோகாதீஷ்: சோமாலியாவில் உள்ள கால்பந்து அரங்கத்தில் இன்று காலை நடந்த வெடிகுண்டு விபத்தில் 5 பேர் பலியாயினர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள், இங்கு பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலநாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் கென்யா, ஜிபோட்டி, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆப்பிரிக்க யூனியனை சேர்ந்த கூட்டுப்படையினரை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை சோமாலியா நாட்டின் துறைமுக நகரமான பாராவேவில் உள்ள ஒரு கால்பந்து அரங்கத்தில் வெடிகுண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிகுண்டு விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த போது அரங்கத்தில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சோமாலியாவின் அல்-கொய்தாவுடன் இணைந்த பயங்கரவாத குழுவான அல்-ஷபாப் உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டது.
சோமாலியா வெளிநாட்டினர் அதிகமாக கூடும் பிரபல ஓட்டல்களின் மீது தாக்குதல் நடத்தி, பலரை சுட்டுக் கொல்வதும், சிலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்தும் கொடுமை படுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.