ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதி சிறுமியின் கொலை வழக்கை விசாரிக்கும் பெண் வழக்குரைஞர் தான் கொலை செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவாவில் 8 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனார். பின்னர் ஒரு வாரம் கழித்து, வீட்டின் அருகே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அச்சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எதிர்ப்புகள் வலுக்கவே சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் அந்தச் சம்பவம் தொடர்பாக தலைமைக் காவலர் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதில், ஆதாரங்களை அழிக்க முயன்றதாக 2 காவல்துறை அதிகாரிகளும், ஒரு காவலரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனிடையே சிறப்பு விசாரணை குழுவினர் கைது நடவடிக்கையை கண்டித்தும், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக மாநில பாஜகவினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மாநில வனத்துறை அமைச்சர் லால் சிங் மற்றும் வர்த்தக அமைச்சர் சந்தர் பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாஜகவைச் சேர்ந்த 2 அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவில் விலகுவதாக கூறி ராஜிநாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் சத் சர்மா, முதல்வர் மெஹபூபா முஃப்திக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது ராஜிநாமா ஏற்கப்பட்டதாக முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்தார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதி சிறுமியின் கொலை வழக்கை விசாரிக்கும் பெண் வழக்குரைஞர் தீபிகா சிங் ராஜவத், தான் கொலை செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிறுமியின் கொலை வழக்கை விசாரிக்கும் நான் தனிமைப்படுத்தப்படுகிறேன். நீதிமன்றத்தில் பயிற்சி செய்ய என்னை அனுமதிப்பதில்லை. நான் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம். கொலையும் செய்யப்படலாம். தன் குடும்பத்திற்காகவும், சிறுமியின் குடும்பத்திற்காகவும் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும், நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என தெரிவித்துள்ளார்.