பேராசிரியை நிர்மலாதேவியின் பின்புலத்தில் இருந்த உயர் அதிகாரிகளை கண்டறிந்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் இயங்கி வரும் அந்தத் தனியார் கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்படுகிறது. இந்தக் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசிய ஆடியோ பேச்சு வைரலாகியுள்ளது.
நிர்மலா மாணவிகளுடன் உரையாடிய ஆடியோ வெளியானதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அவர் தற்காலிகமாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவியின் வீட்டுக்கு போலீஸார் சென்ற நிலையில் அவர் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு வெளியே வர மறுத்ததை அடுத்து வீட்டின் பூட்டை உடைத்து போலீஸார் நிர்மலாவை கைது செய்தனர்.
ஆளுநர், அவரது அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித் துறை பல்கலைக்கழக உயரதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுகிறது. நிர்மலா தேவி கருவியாக செயல்பட்டிருக்கிறார். அவரை பின்னிருந்து இயக்கியவர்கள் உயர் அரசியல் மற்றும் அதிதார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என கூறப்படுகிறது.
இந்நிலையில் பேராசிரியை நிர்மலாதேவியின் பின்புலத்தில் இருந்த உயர் அதிகாரிகளை கண்டறிந்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார் மேலும் அறவழியல்லாது, பிறவழி தேடும் பேராசிரியர்கள் மீதும் கல்லூரி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.