சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தேமுதிக பொதுச் செயலர் விஜயகாந்த் தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி தேமுதிகவினர் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை திரும்பப்பெற வலியுறுத்தியும், பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் நடிகர் எஸ்.வி. சேகரை கண்டித்து முழக்கமிட்டும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செயல்பாட்டைக் கண்டித்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் கண்டன போராட்டத்தை பொதுச்செயலர் விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர்.
சென்னையில் எதிர்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால், ஆளுநர் மாளிகையை சுற்றி இணை ஆணையர் மற்றும் 4 துணை ஆணையர் தலைமையில் ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.