கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப் பதிவு நேரத்தை ஒருமணி நேரம் நீட்டித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. மாநிலத்தின் அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வெப்பநிலை மிகவும் அதிகரித்து காணப்படுவதையும், வாக்காளர் எந்தச் சின்னத்திற்கு வாக்களித்தார் என்பதை அவர் அறிந்துகொள்ளும் கருவி (விவிபிஏடி) அறிமுகம் செய்யப்பட்டிருப்பதையும் கருத்தில் கொண்டு, அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் கருதுகிறது.
எனவே, தற்போது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 56 மற்றும் பொதுவிதிகள் சட்டம் 1897 (10/1897) ஆகியவற்றைப் பின்பற்றி, வாக்குப்பதிவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம், தேவைப்பட்டால், பிரிவு (B)-படி காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நீட்டித்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.