புதுதில்லி: பிரீமியம் பெறுவதிலேயே குறியாக இருக்கும் காப்பீட்டு நிறுவனங்களும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் சாலைப் பாதுகாப்பிற்கு பங்களிக்க வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி தில்லியில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, காப்பீட்டு நிறுவனங்கள் அதிகத்தொகையைப் பிரீமியமாகப் பெறுவதிலேயே குறியாக இருப்பதாகவும், சாலைப் பாதுகாப்புக்கு அவை எந்தப் பங்களிப்பையும் வழங்குவதில்லை என்றும் தெரிவித்தார்.
இதேபோல் அதிக லாபம் பெறும் வாகன உற்பத்தி நிறுவனங்களும் சாலைப் பாதுகாப்புக்காகப் பங்களிப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களும், வாகன உற்பத்தி நிறுவனங்களும் சாலைப் பாதுகாப்பு திட்டங்களுக்கு குறிப்பிடத் தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக சுட்டிக்காட்டினார். ஆனால், இந்த விஷயத்தில் இந்திய நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன என குறிப்பிட்டார்.
மேலும் சாலை விபத்துக்கள் குறைவதால் பெரும் பயனடைவது காப்பீட்டு நிறுவனங்கள் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் ஆண்டுக்கு அதிகபட்சமாக 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 1.5 லட்சம் பேர் தங்கள் உயிர்களை இழக்கின்றனர்.