துயர சம்பவத்தைக்கூட தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சொல்லும் கலைஞர் கருணாநிதி...
இன்று.. கடலூர் மாவட்டம் சிதம்பரம் விளங்கியம்மன் கோவில் தெருவில் கருணாநிதியின் மைத்துனரான மறைந்த பாடகர் சி.எஸ்.ஜெயராமன் வீடு உள்ளது.
இவரின் சகோதரி பத்மாவதிதான் கருணாநிதியின் முதல் மனைவி ஆவார். இவர்களின் திருமணம் 1944 -ஆம் ஆண்டு திருவாரூரில் நடைபெற்றது.
கருணாநிதி மறைவையொட்டி, விளங்கியம்மன் கோவில் தெருவில், எங்கள் தெருவின் மாப்பிள்ளை கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி' என்று பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கருணாநிதி மறைவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோயில் நான்கு கோபுரங்களிலும் கோயில் தீட்சிதர்கள் மோட்ச தீபம் ஏற்றினர்.
அன்று... இசை சித்தர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சிதம்பரம் ஜெயராமனுக்கு மயிலையில் திரைப்பட இசைக்கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் கருணாநிதி பங்கேற்று பேசுகையில், ''1944-ஆம் ஆண்டில் இசை சித்தரின் சகோதரி பத்மாவதியை என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றேன். ஒரே நாளில்தான் எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. அவருடைய திருமணம் புரோகிதர் புடைசூழ நடந்தது. எனது திருமணம் நாவலர் தலைமையில் நடந்தது.
திருமணம் முடிந்த மூன்றே மாதங்களில், இசை சித்தர் தனது மனைவியை இழந்தார். ஆனால், நான் என் மனைவியோடு மூன்று ஆண்டுகள் வாழ்க்கை நடத்தினேன். இதை ஒருமுறை அவரிடம் வேடிக்கையாக, பார்த்தீர்களா? வைதீக திருமணத்தைவிட, சீர்திருத்த திருமணத்திற்கு வயது அதிகம்,'' என்றேன்.
வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் திமுகவின் சித்தாந்தங்களை பரப்புரை செய்வதில் கருணாநிக்கு நிகர் வேறு யாருமில்லை என்பதற்கு இந்த நிகழ்வும் சான்றாக அமைந்தது. ஒரு துயர சம்பவத்தைக்கூட தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சொல்லிய கருணாநிதியின் இயல்பை திரண்டிருந்த ஆன்மீக அன்பர்களும், வைதீகக் கூட்டமும் ரசித்துச் சிரித்தது.