கொல்கத்தா: மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி(89) திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சோம்நாத் சாட்டர்ஜிக்கு இன்று லேசான மாரடைப்பு தான் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
வயது மூப்பினால் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த சோம்நாத் சாட்டர்ஜி கடந்த 40 நாட்களாக கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை அடுத்து அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்நிலையில், சோம்நாத் சாட்டர்ஜிக்கு இன்று காலை திடீரென லேசான் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோம்நாத் சாட்டர்ஜியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு லேசான நெஞ்சுவலி தான் ஏற்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். விரைவில் குணமடைவார் என மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1968-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மத்திய குழு உறுப்பினர் சோம்நாத் சாட்டர்ஜி.
89 வயதாகும் சோம்நாத் சாட்டர்ஜி பத்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். இந்திய நாட்டில் அதிக காலம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்ற சிறப்புக்குரியவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான சோம்நாத் சாட்டர்ஜி, 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, மக்களவை சபாநாயகராக இருந்து வந்தவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவைத் திரும்பப் பெற்ற பின், மூத்த தலைவரான சோம்நாத் சாட்டர்ஜி, சபாநாயகராக பதவியில் விலக மறுத்துவிட்டதால் 2008-இல் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.