சென்னை: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க உத்தரவிடக்கோரி கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த ரசூல் ராய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிகயளவில் தண்ணீர் தேக்க வேண்டாம் என்று பினராயி விஜயன் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
பின்னர், முல்லைப் பெரியாறு அணையில் அதிக தண்ணீர் தேக்க வேண்டாம் என்று பினராயி விஜயன் எழுதிய கடிதத்துக்கு தமிழக முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.
அதில், வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப முல்லைப்பெரியாறு அணை திறக்கப்படுகிறது என்றும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால் அணையின் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆக.4-இல் உச்சநீதிமன்றத்தால் நியமித்த மேற்பார்வை குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது. மேலும் 142 அடி அளவுக்கு தண்ணீரை தாங்கும் அளவுக்கு அணை பாதுகாப்பாக உள்ளதாக குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். அணையின் நீர்மட்டம் 142 அடி தாண்டாத அளவுக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், நீர்ப்பிடிப்பு இடங்களில் மழையை அளக்க தமிழக அதிகாரிகளை கேரளா அனுமதிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.