சென்னை: கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதியுதவியாக அளித்துள்ளார்.
கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை கேரளா சந்தித்துள்ளது. வெள்ளம் மற்றும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 194க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 14 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, கேரளா மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மற்ற மாநிலங்கள் நிதியுதவி வழங்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து கேரளாவுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவிகள் வந்து கொண்டிருக்கின்றன.
கேரளாவுக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.500 கோடி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழக அரசு ரூ.10 கோடி, நிதியுதவியும், கர்நாடக அரசு ரூ.10 கோடி, தில்லி அரசு ரூ.10 கோடி, ஜார்க்கண்ட் அரசு ரூ.5 கோடியும், குஜராத் அரசு ரூ.10 கோடி, பிகார் ரூ.10 கோடி, ஒடிஷா அரசு சார்பில் ரூ.5 கோடி, உத்தரப்பிரதேச அரசு ரூ.15 கோடி, மகாராஷ்டிரா அரசு ரூ.20 கோடி நிதியுதவி அளிப்பதாக அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
கேரள மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூ. 25 லட்சம், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம், விஜய் சேதுபதி ரூ.25 லட்சம், தனுஷ், ரூ.10 லட்சம், சித்தார்த் ரூ.10 லட்சம், சிவ கார்த்திகேயன் ரூ.10 லட்சம், நடிகை ஸ்ரீபிரியா, ரோகினி, நயன்தாரா தலா 10 லட்சம் நிதியுதவியாக முதல்வர் நிவாரணத்துக்கு வழங்கியுள்ளார். .
இந்நிலையில், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு உதவும் வகையில் ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் ரஜினிகாந்த். நிதியுதவிக்கான ரூ.15 லட்சத்தை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.