கொல்கத்தா: ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதால் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், பாஜக அல்லாத கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று சனிக்கிழமை நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஒன்றில் பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் கலந்துகொண்டு பேசுகையில், சர்வாதிகாரத்துக்கு எதிராக நம்முடைய எதிர்ப்பைக் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும், நாம் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து போராட வேண்டும். பிரச்னைகளை விமர்சித்து, வலது சாரி அமைப்புகளைத் தேவைப்பட்டால் எதிர்க்க வேண்டும். சமத்துவத்துக்கு மிகப்பெரிய ஆபத்து, அச்சுறுத்தல் இருக்கும் போது, நாம் போரிட வந்துவிட்டால், நாம் கண்டிப்பாக பின்வாங்கக்கூடாது என்று கூறினார்.
2014-ம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்தது, ஒரு கட்சிக்கு 55 சதவீத வாக்குகள் கிடைத்தது அந்தக் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை, ஆனால், 35 சதவீத வாக்குகள் பெற்ற பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது.
சர்வாதிகாரத்தைத் தடுத்து நிறுத்தி, சமத்துவத்தின் விதைகளை விதைக்க வேண்டும். இந்த விதை முளைக்க நீண்டகாலம் எடுத்துக்கொண்டாலும், எதிர்காலத்தில் நாம் அனைவரும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடும் போதுதான் ஆபத்தில் இருந்து ஜனநாயகத்தை மக்களால் மட்டுமே காப்பற்ற முடியும். நாம் ஒருபோதும் போராட்டத்தை நிறுத்திவிடக்கூடாது எனவும் அமர்தியா சென் கூறினார்.
மேலும், தில்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலையில் சில மாணவர்கள் மீது தேசவிரோத சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டத்துக்கு எதிராக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அந்த மாணவர்கள் மீது எந்தவிதமான குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. சட்டவிரோதமான செயல் எப்படி நடந்தது என்பதை அனைவரும் பார்த்தோம்.
இந்த முறை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நாளை மக்கள் மீது நடத்தப்படலாம் என்றவர் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், பாஜக அல்லாத கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்தினார்.