பிவாண்டி: மகாராஷ்டிராவில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் பாஜக தலைவர் குருநாத் வாமன்(55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தானே மாவட்ட பாஜக துணைத்தலைவராக குருநாத் வாமன் லாஸ்னி, பிவாண்டியில் செராவாலி கிராமம் அருகே நேற்று திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் காரில் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து குருநாத் வாமனின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், குருநாத் வாமன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதையடுத்து பேருந்து ஓட்டுநர் தலைமறைவானார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், குருநாத் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவான பேருந்தின் ஓட்டுநர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 304(ஏ), 184 மற்றும் 279 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஓட்டுநரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.