புதுதில்லி: பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி அருண் மர்வாஹா(51) தில்லியில் சிறப்பு பிரிவு போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அழகான பெண் போன்று வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பேசிய பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு, முக்கிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை விமானப்படை அதிகாரி அனுப்பியதால் அருண் மர்வாஹா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள விமானப்படை அதிகாரி ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த ஏஜெண்ட் அருண் மர்வாஹாவை தொடர்பு கொண்டதாகவும், அப்போது அவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட நம்பகத்தன்மையை அடுத்து விமானப்படையின் முக்கிய தகவல்கள் மற்றும் ரகசிய ஆவணங்களை கேட்டு பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தில்லி சிறப்பு போலீஸ் பிரிவு நேற்று வியாழக்கிழமை அருண் மர்வாஹா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.