மாஸ்கோ: மாஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சரடோவ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மாஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 71 பயணிகளுடன் அரசாக் என்ற நகருக்கு புறப்பட்ட ஏ. என்-148 என்ற சரடோவ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ரஷ்ய பயணிகள் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேடாரில் இருந்து காணாமல் போய் உள்ளது.
பின்பு அந்த விமானம் "ஆர்குனோவா" என்ற கிராமத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் விமானத்தில் பயணித்த 65 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 71 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது மீட்பு குழுவினர் ஆர்குனோவா கிராமத்திற்கு விரைந்துள்ளனர். தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விமான பாகங்கள் விழுந்த இடம் குறித்தும், உயிருடன் யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் தீவிரமாக தேடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.