கோயிலுக்கு உள்ளே மற்றும் சுவரை ஒட்டி உள்ள கடைகளை அகற்ற இந்துசமய அறநிலையத் துறைக்கு முதல்வலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
உடனடி பாதுகாப்பு கருதி, கோயில்களின் வளாகத்திற்குள்ளேயும், மதில்சுவர் ஒட்டியும் உள்ள கடைகளை அகற்றிட வேண்டும். தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகளை தணிக்கை செய்ய வேண்டும் கோயில் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று துறை சார்ந்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள உத்தரவில்
முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள முதுநிலை அந்தஸ்துடைய பெரிய திருக்கோயில்களில் அமைந்துள்ள புராதான சிற்பங்கள், கல்தூண்கள், கட்டுமானங்கள் ஆகியவைகளுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம், பாதுகாப்பான மற்றும் தரமான மின் இணைப்புகளை அமைக்க வேண்டும்.
மேலும், திருக்கோயில்களில் விளக்கு ஏற்றுவதற்காக பக்தர்கள் கொண்டு வரும் எண்ணெய், நெய் ஆகியவற்றை ஓரிடத்தில் சேகரித்து வைத்து, அதனையே திருக்கோயில்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். மேலும், திருக்கோயில் வளாகத்தில் இதைப் பற்றிய அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.
முதுநிலை அந்தஸ்துடைய பெரிய திருக்கோயில்களில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வினை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொண்டு, தீ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உபகரணங்கள் சரியாக உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும்.
முதுநிலை அந்தஸ்துடைய பெரிய திருக்கோயில் வளாகங்கள் அல்லது அவற்றின் அருகாமையில் ஒரு தீ அணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தீ அணைப்பு உபகரணங்களான தீ அணைப்பான்கள், நீர்தும்பிகள், மணல் வாளிகள், தண்ணீர் வாளிகள் ஆகியனவற்றை அவ்வப்பொழுது பரிசோதனை செய்து, எந்த நேரத்திலும் இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
திருக்கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அதனை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.