மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், தனது 8 வயது மகளை கோடரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான முருகன் என்பவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். லட்சுமியின் மீது நடத்தையில் சந்தேகம் அடைந்த முருகன், அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மனைவி லட்சுமி, தனது குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் உவரியில் உள்ள தமது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அடுத்து அவரது பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன் சமாதானம் பேசி லட்சுமியையும், குழந்தைகளையும் முருகனிடம் விட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டின் கதவை பூட்டிய முருகன், கோடரியை எடுத்து மனைவியை தாக்கினார். அலறல் சத்தம் கேட்டு எழுந்த 8 வயது மகள் இருளாயி இதை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், தமது மகள் என்றும் பாராமல் ஆத்திரத்தில் கோடரியால் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த லட்சுமியை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வில்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற கொலையாளி முருகனை தேடி வருகின்றனர்.
தந்தையே மகளை கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.