வங்கி அதிகாரிகளை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்ய வேண்டும்: மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவு

3 ஆண்டுகள் ஒரே வங்கி கிளையில் பணியாற்றி வரும் வங்கி உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்
வங்கி அதிகாரிகளை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்ய வேண்டும்: மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவு

புதுதில்லி: 3 ஆண்டுகள் ஒரே வங்கி கிளையில் பணியாற்றி வரும் வங்கி உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

இந்திய வங்கித் துறையில் விஜய் மல்லையா விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சியே அடங்காத நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியபாரி நீரவ் மோடியின் ரூ.11,300 கோடி முறைகேடு மற்றொரு பூகம்பம் வெடித்திருக்கிறது.

மும்பையைச் சேர்ந்த அந்த வங்கியின் ஒரு கிளை அளித்த வங்கி உத்தரவாதத்தின் அடிப்படையில், வைரத் தொழிலதிபர் நீரவ் மோடியின் கீதாஞ்சலி குழுமம் தொடர்புடைய நிறுவனங்களுக்காக, வெளிநாடுகளிலுள்ள இந்திய பொதுத் துறை வங்கிகள் தாராளமாக வாரி வழங்கியிருக்கின்றன.

ரூ.11,300 கோடிக்கும் மேல் வழங்கப்பட்டுள்ள இந்தக் கடன்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளதால், அந்தக் கடன்களை திருப்பித் தருவதற்கான பொறுப்பு பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலையில் விழுந்துள்ளது.  
  
இதற்கான உத்தரவாதக் கடிதங்களை, வங்கிக் கிளையில் பணி புரிந்த இரு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அளித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

கிளைக்குப் புதிதாக வந்த அதிகாரி ஒருவர் அந்தக் கடிதங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நிர்வாகத்துக்கு தகவல் தந்ததாகவும், பதறிப் போன வங்கி நிர்வாகம் மத்திய புலனாய்வு அமைப்பிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இருந்தாலும், சொல்லி வைத்தது போல அந்தப் புகார் மனு சிபிஐ-யின் கைகளுக்குச் சேர்வதற்கு முன்னரே தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் இந்தியாவைவிட்டு மிக பத்திரமாக தப்பிச் சென்று விட்டார். 

அவர் நாட்டைவிட்டே போன பிறகு இந்த முறைகேடு குறித்து புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீரவ் மோடி மீதும், அவரது மனைவி, சகோதரர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல பொதுத் துறை வங்கிகளில், இப்போது கூறப்படும் ரூ.11,300 கோடி மட்டுமல்லாமல் அதைவிட அதிகமாக மோசடி நடந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சிபிஐயும், அமலாக்கத்துறையும் அதிரடி நடவடிக்களை எடுக்கத் தொடங்கியுள்ளன.

நீரவ் மோடி மோசடி விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், 3 ஆண்டுகள் ஒரே வங்கி கிளையில் பணியாற்றிய வங்கி உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் கடந்த ஆண்டு இறுதியுடன் 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த கணக்காளர் உள்ளிட்ட அலுவலர்களையும் உடனடியாக பணிமாற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளது. 

இதையடுத்து மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் இந்த வழிகாட்டுதல்களை உடனடியாக அமல்படுத்தும் நடைமுறைகளை தொடங்கி இருப்பதாக பாங்க் அப் பரோடா கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com