சென்னை: ஆட்சி சரியில்லை எனக் கூறும் நான் அதிமுகவினரை சந்திக்க முடியுமா? என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து பேசி வருகிறார்.
நாளை கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்க உள்ள நிலையில், சீமானின் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவரின் சந்திப்புக்கு பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், மண்ணின் மக்கள் ஏற்க கூடிய தலைவரான கமல், என்னை சந்திக்க வருவதாக கூறினார். அதனால் எனது சகோதரரான கமலை நான் வந்து சந்திப்பதே மரியாதை. கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசனை நேரில் வந்து வாழ்த்தினேன்.
இருவரும் இணைந்து பணியாற்றுவதை காலம் தான் பதில் சொல்லும் என்றவர் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படாதா என மக்கள் ஏங்குகின்றனர் என சீமான் தெரிவித்தார்.
கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் கட்சி தொடங்கும் தனக்கு வாழ்த்து தெரிவித்தார் சீமான். எனது கட்சியின் கொள்கையை அறிந்த பின்பு சீமான் ஆதரவு குறித்து விளக்குவார். நாளை அறிவிக்கவுள்ள பிரகடனத்தை பார்த்த பிறகு சீமான் கருத்து கூறுவார். நாங்கள் இருவரும் இணைய வேண்டும் என நீங்கள் நினைத்தால் இணைவோம் என்றார்.
மேலும் அதிமுகவினரை சந்திக்கவில்லை என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆட்சி சரியில்லை எனக் கூறும் நான் அதிமுகவினரை சந்திக்க முடியுமா? என பதில் கூறினார்.
10 சதவீத வாக்குகள்கூட பெறமுடியாது என பாமக நிறுவனக் ராமதாஸ் கூறிய கருத்து, மூத்தவர்கள் கூறினாலும், இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம் என பதில் அளித்தார் கமல்.