மும்பை : புனேவில் நடந்த தலித்துகள் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மகாராஷ்டிராவில் பதற்றம் ஏற்பட்டது
இந்த வன்முறை சம்பவத்தில் ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார்.போலீசார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவியதால் ஏராளமான மாநில ரிசர்வ் படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
புனேயில் ஏற்பட்ட இந்த மோதல் மும்பை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவியது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 134 அரசு பஸ்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், மகாராஷ்டிராவின் பிரதான நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வன்முறையைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மஹாராட்டிர மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. முழு அடைப்பு போராடத்தையொட்டி மும்பை உட்பட மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, பாரிபா பகுஜன் மகா சங்கத் தலைவரும், சட்டமேதை அம்பேத்கரின் பேரனுமான, பிரகாஷ் அம்பேத்கர் கூறுகையில், “ இந்த வன்முறை சம்பவங்கள், தலித் மக்களுக்கும், மராத்தா மக்களுக்கும் இடையேயான மோதல் இல்லை. வன்முறை ஏற்படாமல் தடுக்க, மாநில அரசு தவறிவிட்டது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை ஏற்க முடியாது. உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்றார்.