சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு, தைப்பொங்கல், தமிழர் திருநாளையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை தொண்டர்களை சந்திக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.
தனது ஆட்சி காலத்தில் தை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டு என அறிவித்த கருணாநிதி, ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான தைத்திங்களில் தொண்டர்களை சந்தித்து அன்பாக ரூ.10 வழங்குவது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை.
இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு அவரது கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை கருணாநிதி சந்திக்கிறார் எனவும் தொண்டர்களை சந்திக்கும் அவர், அவர்களுக்கு புதிய ரூ.50 நோட்டு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது கோபாலபுரம் வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவரின் ஆலோசனைப்படி கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க தெண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
15 மாதங்களுக்கு பின்பு தொண்டர்களை கருணாநிதி சந்திக்க இருப்பதால் ஏராளமானோர் சந்திக்க வருவார்கள் எனவும் இது திமுக தொண்டர்களுக்கு நிச்சயம் பொங்கல் பரிசாக அமையும் என கூறப்படுகிறது.
உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வரும் கருணாநிதி, கடந்த 15 மாதங்களாக தொண்டர்களுடன் சந்திப்பு நடத்த முடியவில்லை. பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலும், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருந்ததாக மருத்துவர்கள் கூறியதால் வீட்டிலேயே கருணாநிதி ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.