சென்னை கொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான நாதுராம் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் நாதுராமை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள நகைக்கடையில் கடந்த நவம்பர் 16ம் தேதி 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டன. நகைக் கடையின் மேல் தளத்தில் துளைப்போட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டனர். கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இக்கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற, தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன், கொள்ளையர்களால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார். இந்த தாக்குதலில், மற்றொரு இன்ஸ்பெக்டர் உட்பட, மூன்று போலீசார் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் குஜராத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் நாதுராமை ராஜஸ்தான் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.