நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 29-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி வரை நடத்துவதற்கு மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரைத்திருந்தது. இதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரு அமர்வுகளாக நடைபெறுகிறது. இதன்படி, பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடக்கிறது.
2-ஆவது அமர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், ஜனவரி 29-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார். அதேநாளில், பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
இதுகுறித்து மாநிலங்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், 'குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை வரும் 29-ஆம் தேதி கூட்டப்பட்டுள்ளது. அவை அலுவல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முத்தலாக் தடை மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.