கோபி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழன்தார். 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் தாலுகாவுக்கு உள்பட்ட மூணாம்பள்ளி செம்மாண்டம்பதியில், எலத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இதில், எலத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 22 நபர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள், உரிமையாளர் வியாழக்கிழமை ஈடுபட்டுள்ளனர். அப்போது, திடீரென வெடி மருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசு ஆலை தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக, பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் ஓடி வந்துள்ளனர்.
பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு வெடிச் சப்தம் கேட்டதும் அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோபி தீயணைப்புத் துறையினர் 10-க்கும் மேற்பட்டோர் முதலில் ஆலைக்குள் இருந்த தொழிலாளர்களைக் காப்பாற்றி கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து தீயை முற்றிலும் அணைத்தனர்.
இந்த விபத்தில் எலத்தூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள், தொழிற்சாலையின் உரிமையாளர் பிரான்சிஸ் உள்பட பத்து பேர் பலத்த காயமடைந்தனர்.
பலத்த காயமடைந்த பிரேமா, செல்லப்பன், முருகன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தீ விபத்து குறித்து கடத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எலத்தூரைச் சேர்ந்த செல்லப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.