ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தலைமை காவலர் குல்காம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோபியன் மாவட்டம், கச்டூரா என்ற பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த தலைமை காவலர் ஜாவியத் அகமது தார் என்பவர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார்.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தலைமை காவலரை மீட்கும் பணியில் அம்மாநில பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாந்த நிலையில் தலைமை காவலர் ஜாவியத் அகமது தார், குல்காம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.