ஹோஷங்காபாத்: மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து வேலைக்கு வராத பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டி வைத்து சவுக்கால் அடித்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் 5-6 நாட்களாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் அந்த ஊழியரை அழைத்துவந்து பொட்ரோல் பங்க் சுவற்றில் கட்டி வைத்து சவுக்கால் அடித்ததுடன் தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இன்று சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஊழியரை பில்லரில் கட்டி வைத்து கொடுமையாக அடிக்கிறார், உரிமையாளரின் நண்பர்கள் உடன் உள்ளனர். அப்போது, அந்த ஊழியர் விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டதால் 5-6 நாட்களாக வேலைக்கு வரமுடியவில்லை என்று கூறுகிறார்.
ஆனால், ஊழியர் கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ளாத உரிமையாளர், காலில் அடிபட்டால் என்ன, கூப்பிட்டால் வரமுடியாதா? என்று தகாத வார்த்தைகளால் திட்டி தொடர்ந்து அடிக்கிறார்.
ஊழியரை கட்டி வைத்து தாக்கியது தொடர்பான வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர், அவரது நண்பரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.