குகையில் இருந்து மீட்கப்பட்ட எட்டு சிறுவர்களும் நலமாக உள்ளனர் - பொது சுகாதார அமைச்சகம் தகவல்

தாய்லாந்தில் மழை வெள்ளம் காரணமாக குகைக்குள் சிக்கி மீட்கப்பட்ட 8 சிறுவர்களின் உடல் நல்ல ஆரோக்கியத்துடனும், நல்ல மனநிலையில்
குகைக்குள் அமைந்துள்ள மீட்பு முகாம்..
குகைக்குள் அமைந்துள்ள மீட்பு முகாம்..

மீசாய்:  தாய்லாந்தில் மழை வெள்ளம் காரணமாக குகைக்குள் சிக்கி மீட்கப்பட்ட 8 சிறுவர்களின் உடல் நல்ல ஆரோக்கியத்துடனும், நல்ல மனநிலையில் உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
  
தாய்லாந்தில், 11 முதல் 16 வயது வரை கொண்ட 12 சிறுவர்களை, அவர்களது 25 வயது கால்பந்து பயிற்சியாளர் சியாங் ராய் என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றார்.

அப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட குகையைப் பார்வையிட, அந்த 13 பேரும் அதற்குள் சென்றுள்ளனர். எனினும், திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது.

அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களைத் தேடி அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழுவினர், குகை வாயிலில் அவர்களது மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள் இருப்பதை வைத்து அந்தக் குகைக்குள் அவர்கள் சென்றிருப்பதை உறுதி செய்தனர்.

எனினும், தொடர்ந்து பெய்து வந்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக குகைக்குள் சென்று அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்தத் தகவல், தாய்லாந்து முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குகைக்குள் மாயமான சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டன.
இந்தச் சூழலில், மழை வெள்ளம் கொஞ்சம் வடிந்ததால் சிறுவர்கள் சிக்கிய 7 நாள்களுக்குப் பிறகு தேடுதல் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, அந்த 13 பேரும் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எழுந்தது. எனினும், கடுமையான வெள்ளம் மற்றும் சகதியில் அவர்கள் இத்தனை நாள்கள் உயிர் பிழைத்திருப்பது கடினம் என்றும் அஞ்சப்பட்டது.
இந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நீச்சல் வீரர் ஒருவர் குகையின் பாறை மேடு ஒன்றில் அந்த 13 பேரையும் திங்கள்கிழமை இரவு கண்டறிந்தார்.

பசி மற்றும் களைப்பால் மிகவும் சோர்வுற்றும், மெலிந்தும் காணப்பட்ட அவர்கள் அந்த வீரரிடம் பேசிய விடியோவை தாய்லாந்து கடல் அதிரடிப்படை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் உயிருடன் கண்டறியப்பட்டது தாய்லாந்தில் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களை மீட்கும் பணிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இதில், 4 சிறுவர்கள் முதலில் மீட்கப்பட்டனர்.

இதையடுத்து குகைக்குள் சிக்கியுள்ள மற்ற சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் இருக்கும் இடத்தை அடைவதற்கான மாற்றுப் பாதைகளை உருவாக்கும் வகையில், மலைகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் துளைகள் இடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று நேற்று திங்கள்கிழமை மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதனால் மீட்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது.  இன்னும் 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணியில் தாய்லாந்து ராணுவ வீரர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இதுவரை மீட்கப்பட்ட 8 சிறுவர்களின் உடல் நல்ல ஆரோக்கியத்துடனும், நல்ல மனநிலையிலும்  உள்ளதாகவும், அவர்களுக்கு காய்ச்சல் எதுவும் இல்லை என தாய்லாந்தின் பொது சுகாதார அமைச்சகத்தின் நிரந்தர செயலர் ஜெசடா சியாங் ராய் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

மேலும் மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் குறைந்தது 7 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வார்கள் என்றும், அவர்களை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

ஞாயிறன்று மீட்கப்பட்ட நான்கு சிறுவர்களும் சாதாரணமான உணவையே உண்ணுகின்றனர். "அவர்கள் சாக்லேட் கேட்கிறார்கள், அவர்கள் நன்றாக சாப்பிடுவதால் சரி கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளோம். 

சிறுவர்களை அவர்களது பெற்றோர்களில் சிலர் கண்ணாடி மூலம் தங்கள் குழந்தைகளை பார்க்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com