புதுதில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு குறித்து இன்று தில்லி நீதிமன்றத்தில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறுகிறது.
கடந்த 2006-இல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி சிதம்பரம் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் 5-ஆம் தேதி ம்மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் சிதம்பரத்தை ஜூன் 10-ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை இன்று செல்வாய்கிழமை (ஜூலை 10) நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணை இன்று நடைபெற இருக்கிறது.
முன்னதாக ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தை கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி சென்னை விமானநிலையத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கார்த்தி சிதம்பரத்திற்கு கடந்த மார்ச் 23-ஆம் தேதி தில்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியதை அடுத்து தற்போது கார்த்தி பிணையில் இருந்து வருகிறார்.