கொழும்பு: இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் மரண தண்டனையை அமல்படுத்த அதிபர் சிறிசேனா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் கடந்த 1976-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, மரண தண்டனை அளித்தாலும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது, ஆயிரம் தூக்குத் தண்டனை கைதிகள் உள்ளனர். அவர்களில் 950 பேர் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து 3 கொலைகள் நடந்துள்ளன. 160 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தண்டனை கைதிகளும் சிறையில் இருந்தபடியே, குற்றத்துக்கு காரணமாக இருந்து வந்த தெரியவந்துள்ளது.
இதையடுத்து போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் அதிபர் மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மரண தண்டனையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக 19 கைதிகளை தூக்கிலிடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றி, அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஒப்புதல் அளித்ததும் மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கைகள் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.