18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்ததற்கு டி.டி.வி. தினகரன் எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார்.
இதையடுத்து தினகரன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவர் பக்கம் 18 எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக ஆளுநரைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதில் எடப்பாடி பழனிசாமிக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் 18 பேரும் கொறடா உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக ஆளுநரிடம் மனு கொடுத்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் கடிதம் கொடுத்தார்.
இதையடுத்து தினகரன் ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் விசாரித்து வந்தனர். வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.