புதுதில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். அவர்களை மன்னித்து கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விவகாரங்களில் குடியரசுத் தலைவர் சம்மந்தப்பட்ட அமைச்சங்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே முடிவை எடுப்பார். இந்த விவகாரத்தில், ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநில அரசின் கோரிக்கையில் மத்திய அரசு ஒத்துப்போகவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. “உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசின் வேண்டுகோள் மனுவை நிராகரித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் கொலைக்குற்றவாளிகள் எந்த சூழலிலும் சுதந்திரமாக நடமாட முடியாது” என உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு இல்லாமல் குற்றவாளிகளை விடுவிக்க மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று டிசம்பர் 2015-இல் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.