தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் வேறு ஒருவரின் இல்லத்துக்குள் சென்று போராட்டம் நடத்த உரிமை இல்லை என தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தில்லி அரசில் பணியாற்றும் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாகப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த திங்கள்கிழமை முதல் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் உள்ளிட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகள் மீது துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் வரை அவரது மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி, துணை நிலை ஆளுநர் மாளிகை வரவேற்பு அறை சோஃபாவிலேயே அவர்கள் காத்திருக்கின்றனர். இப்போராட்டம் 8-ஆவது நாளாக இன்று திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
இதற்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்து இரண்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்று தர்ணா நடத்த யார் அனுமதி கொடுத்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், தற்போது செயல்பட்டு வரும் செலுக்கு போராட்டம் என்று வகைப்படுத்த முடியாதும் என்று கூறிய நீதிபதிகள், இன்னொருவரின் வீட்டுக்குள்ளோ, அலுவலகத்துக்குள்ளோ சென்று போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று தெரிவித்தனர்.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.